இரு பக்கமும் பூக்கள் மலர்ந்த
ஒரு சதுரமான காகிதத்தின்
முனைகளை உள் பக்கமாக மடித்தேன்.
அதன் எதிர் முனைகளைப் பிடித்து
குறுக்கே மடித்து தலையை பின்னுக்கு இழுத்து
மெல்ல விரியும் இறகுகளை
விரல்களால் அழுத்தினேன்.
அதன் பின்னிறகுகளை
மேல் நோக்கி வளைத்துவிட
காலத்தில் ஒட்டாத
ஒரு பட்டாம்பூச்சியாகி இருந்தது.
மௌனமாக வெளியை நோக்கியபடி
ரேகைப் பள்ளத்தாக்கில்
தியானத்தில் அமர்ந்த அதன் சிறகுகளில்
என் உயிர் ஏறி மென்சூடேற்றிட
வண்ணங்கள் பிரிந்து ஒளிப் புள்ளிகளாகின.
ஈரப் பசும் ஒளிசூடி
சூல்களின் மகரந்தம்
மெல்லிய கால்களில் ஏறிட
பள்ளத்தாக்கின் செவியறியாமல்
அகாலத்தைக் கலைத்து
காலத்துள் பறந்தது பட்டாம்பூச்சி.
கைகளில் இருந்ததோ
வெற்றுத் தாள் வடிவம்தான்.
க. ரகுநாதன்
No comments:
Post a Comment