சாலையில் சிதைந்து வானம் பார்த்த
அந்தப் பறவையின் சிறகுகளுக்கு
அந்திமாலை வானின் நிறம்.
அதன் ஒவ்வொரு இறகிற்கும்
இரவின் ஒளியும் குளிரும்
ரகசியமும் கொண்ட
கருநீலவானின் நிறம்.
சிறகுகளிடையே வடிந்து
ஒளிரும் திரவத்திற்கு
செவ்வானின் நிறம்.
நகங்கள் நசுங்கி விறைத்த
அதன் கால்களுக்கு
சிதறிக் கிடந்த நெல்மணியின் நிறம்.
உலகை அளந்த சிறகுகள்
படபடத்த சாலைக்கு
பிரபஞ்ச வெளியின் நிறம்.
கழுத்திற்கும் உடலுக்கும்
இடையே தெரிந்தது
வெற்றுக் காலத்தின் நிறம்.
பறந்தோடும் உயிர் நோக்கிய
அதன் கருமணிக் கண்களுக்கும்
எனக்கும் இடையே
துடித்தது கடவுளின் நிறம்.
க. ரகுநாதன்
No comments:
Post a Comment