Pages

Friday, June 17, 2022

ஒரு வழிப் பாதை

    வானாகினாலும் மண்ணாகினாலும் ஊனாகினாலும் உயிரே போனாலும் காதல் ஒன்று தான். அது எங்கும் யாரிடத்திலும் ஒன்றுதான் என்ற அவன் பேச்சுக்கு முதல் அடி உச்சந்தலையில் விழுந்தது.

             எவனையும் நிமுந்து பார்க்காதவள வளச்சது இந்தக் கைதானொ...” என்று சொன்னவன் அவனுடைய இரு கைகளையும் பின்னால் சேர்த்துப் பிடித்து முதுகை முழங்காலால் அழுத்தி வளைத்தான். ஒருவன் அவன் சட்டையை கழற்றிவிட்டு கைகளைக் கட்டினான். இன்னொருவன் அவன் வேட்டியை உருவி இரண்டாகக் கிழித்து இரண்டு கால்களிலும் தனித் தனியாக நிதானமாகக் கட்டினான். வேட்டியின் இரு நுனியையும் இரண்டு பேர் இழுத்துப் பிடிக்க அவன் கால்கள் மண்ணில் இழுபட்டு விரிந்து நின்றனஒருவன் சாவகாசமாகஅந்தக் கருங்கல்லத் தூக்கியாங்கடாஎன்றான். வாயில் பீடியைப் பற்ற வைத்து ஆழ்ந்து இழுத்தான். புகையை விட்டபடியேஅது ஒன்னுமில்லையப்பாகொஞ்ச நாளைக்கு மொண்டீட்டு இருந்தயான்னா எல்லாஞ் சரியாப்போவும்என்றபடியே கல்லைத் தூக்கி வெறியோடு முழங்காலில் போட்டான்.

             அய்யோவென்ற அவன் அலறல் அந்த இடத்திலிருந்து வீட்டுக்குத் தூக்கி வரப்பட்ட அவளுக்கு கேட்டிருக்காது. "இந்தக் கண்ணுதான்டா நாயே அவள பாத்துச்சு" என்றபடி ஒருவன் அவன் கண்களில் குச்சியால் குத்தினான் ஒருவன். கண்களில் வலி இறங்கி பின் மண்டையில் பளீரென்றது. அவன் பார்த்து ரசித்த மணலை ஒருவன் அள்ளி அள்ளி அவன் கண்களில் போட்டான். தலையில் இருந்து வழிந்து சென்ற திரவம் வியர்வையா ரத்தமா என்று அந்த இருளில் யாருக்கும் தெரியவில்லை.

   அய்யோ...என்னை விட்டுருங்க..தெரியாம பண்ணிப் போட்டேன்..வலிக்குதுடாவிடுங்கடா..” எனத் தாளாத வலியில் ஒலித்த அவன் கதறல் கூட்டத்தில் சிதறி இருளில் கரைந்தது.

             இந்தக் காலுதானே இழுத்துட்டு ஓடுச்சு?" என்று கேட்டவன் கூரிய கல்லால் பாதத்தில் ஓங்கி ஓங்கிக் குத்தினான். கட்டை விரலுக்கும் நடு விரலுக்கும் இடையில் பாதத்தைப் பொத்துக் கொண்டு சென்ற கல் மேலே இழுத்தபோது வர மறுத்தது. இருவர் அவன் பாதங்களில் அழுத்திப் பிடித்துக் கொள்ள ஒருவன் அந்தக் கல்லைப் பிடுங்கி எடுத்தான். இன்னொருவன் வைத்திருந்த கத்தியால் தொடையின் உள்பக்கம் குத்திப் பிளந்தான். அதில் ஒரு பிடி மண்ணை மறக்காமல் அள்ளிப் போட்டான்.

             தள்ளுங்கடா...எல்லாத்துக்கும் காரணம் இந்தச் சாமானந்தே...” என்று எங்கிருந்தோ ஒரு வேப்பங்கட்டையோடு ஓடி வந்தவன் இரு கால்களுக்கு இடையில் அடிவயிற்றின் கீழ் ஓங்கி அடித்தபோது அவன் மண்ணில் முகம் புதைய வீழ்ந்தான்.

        கண் விழித்த போது அவன் அம்மா அருகில் அமர்ந்து அழுது கொண்டிருந்தது மங்கலாகத் தெரிந்தது. ரணத்தால் வந்த வலியா இல்லை மனத்தால் எழுந்த வலியா என்று புரியாமல் கிடந்தான்.

      “எனக்கு அப்பவே தெரியுமக்கா இப்படியெல்லா நடக்குமுனுஎப்ப பாத்தாலும் செல்போனுதேமரத்துக்கடிய நிக்கிறதும் முட்டுச் சந்துக்குள்ள நிக்கிறதும்போகயில வரையில அவ களுக்குனு சிரிக்கிறதும் என்ன அலும்புங்கிறஎன்ற மணியாளின் பேச்சுக்கு…”இருந்தாலும் பாவந்தே…”என்றாள் சுப்பமாக்கா. “பாவமா? உன்ற ஊட்டுல நடக்கறவரைக்கும் எல்லாம் பாவந்தே...காலம் அப்படி ஆகிப் போச்சு...மொளச்சது மொளைக்காததுங்கற கணக்கெல்லா இல்ல என்றாள் பதிலுக்கு.

          ஊரின் பரிதாபப் பார்வையும், அவதூறுப் பேச்சுகளும் அவன் வீட்டைச் சுற்றி அலைந்து கொண்டிருந்தன. எப்படி இவர்களுக்குத் தெரிந்தது, யார் சொல்லி இருப்பார்கள் என்று பழகிய  முகங்களை எல்லாம் நினைவுக்குக் கொண்டு வர எடுத்த முயற்சி எல்லாம் புகையாய் நெளிந்து மறைந்தன.

         ஊட்டியின் சேரிங் கிராஸ் பகுதியில் அவனும் அவளும் அறை எடுத்து தங்கியிருந்தார்கள். யாராவது தேடி வந்து விடுவார்கள் எனப் பயந்த வள்ளி, வெளியே சுற்றிப் பார்க்கலாம் வா என்று முத்து எவ்வளவு அழைத்தும் வர மறுத்தாள். "வேற ஊரு, வேற மனுஷங்க நம்மள யாருக்கும் தெரியாது...பேசாம வா புள்ள" என்று இடுப்பில் கை போட்டு வளைத்தவாறே முத்தமிட்டான்.

  "இப்படி பண்ணிப் பண்ணித்தான் ஒரு வழியாக்கி இங்க கூட்டியாந்துருக்கிற...இந்நேரம் ரண்டு ஊட்லயும் தேட ஆரம்பிச்சிருப்பாங்க" சன்னல் கம்பிகளுக்கு இடையே கன்னத்தை அழுத்திக் கொண்டு அடுக்கடுக்காக கீழிறங்கிச் செல்லும் கட்டடங்களைப் பார்த்துக் கொண்டே சொன்னாள். "பெரிய்ய தப்பு பண்ணுன மாதிரி இருக்குது. ரண்டு மாருக்கு நடுவுலயும் ஏதோ ஒன்னு அழுத்துற மாதிரி படபடன்னு இருக்குது" என்றவளிடம் "எங்கே பார்க்கலாம் என்று கேட்டவாறே மேலே சாய்ந்து சரியவிட்டு சரிந்தான். இந்தக் குளிரிலும் வியர்வை வழிந்தது பயத்தால் இல்லை என்பது இருவருக்கும் புரிந்தது.

             மறுநாள் தாவரவியல் பூங்காவில் விண்முட்டும் மரங்களை கழுத்து வலிக்க அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தவளையே பார்த்துக் கொண்டிருந்தான் முத்து. சட்டென்று கழுத்தில் முத்தமிட்டான். "ஏய் என்ன பண்ணற...யாராவது பாக்கப் போறாங்க..." என்றவள் இரண்டு மர வரிசைகளுக்கு அப்பால் யாரோ சிரித்துக் கொண்டு செல்வதை ஓரக்கண்ணால் பார்த்தவாறு சொன்னாள்.

   "எல்லாத்துக்கும் பயம்தா காரணம். நா என்ன உன்ன மாதிரி பயந்தாங்கோழியாட்டமா இருக்கறவனா...ஆம்பளடி" என்று அரும்பாய் நின்ற மீசையை சிரமப்பட்டு தடவினான்.

            "உனக்கு என்னப்பா...உங்கூட்ல கண்டுபிடிச்சு அடிச்சுத் தொவச்சாக்க சரீ  பழகுனது போதும்னு வேற ஒருத்திய கட்டீட்டு போயிருவ...என் நெலமைய நெனச்சாத்தா அடிவயிறு கலங்குது...சாவு நிச்சயமோனு பயமா இருக்குது...பார்க் முன்னாடி இருக்கிற கேட் முன்னால ரண்டு பேரு நம்பளையே வேவு பாக்கற மாதிரி இருந்துச்சு...நீ அவுனுகளப் பாத்தியா?" என்றாள்.

           "அய்யோ...உன்னால எல்லா மூடும் மாறீரும் போல இருக்குதே...நேத்து இப்படித்தான் அந்த ஓட்டல்ல சப்பாத்தி சாப்பிடும் போது சர்வர் ஒரு மாதிரி பாக்கறான்னே...இன்னைக்கு கேட்டு முன்னால ரண்டு பேருங்கிறஇது டூரிஸ்ட்டுங்க வந்து போற ஊருங்கிறது உனக்குத் தெரியுமா தெரியாதா? கலர் கலரா டிசைன் டிசைனா சைஸ் வாரியா வந்து போறவங்கள பாக்கத்தான செய்வாங்க...இதெல்லாம் ஒரு விஷயமா?" என்றபடியே அவள் தலைக்கு கட்டியிருந்த ஸ்கார்ஃபை முன்னால் இழுத்துவிட்டான்.

             மாலை நேரம் குளிர் ஏற ஏற இருவருக்குள்ளும் நெருக்கம் கூடிக் கொண்டே வந்தது. அந்த நெருக்கம் அறையெங்கும் வெப்பமூட்டி சிறு பொறியாய் பறந்தது. அவளது கைப்பையில் வைத்திருந்த செல்போன் அடித்துக் கொண்டே இருந்ததுகூட அவர்களின் இயக்கத்திற்கு ஒரு தடையாக இருக்கவில்லை. படுக்கையெங்கும் பற்றி எரிந்து அணைந்தபோது உடலெங்கும் ஈரமாயிருந்தது. மீண்டும் ஒலித்த செல்போனை கைகளில் நடுக்கத்துடன் எடுத்தாள். பச்சை பட்டனை அழுத்தி அழைப்பை ஏற்று எதுவும் பேசாமல் காதில் வைத்துக் கொண்டு அவனைப் பார்த்தாள். மறுமுனையில் ஹலோ என்ற குரல் எந்த பாசமும் இன்றி அதிகாரமாகப் பேசியது.

            "வள்ளியா பேசறது..

            ஆங்...ஆமாங்…”

           நா எஸ்.. பேசறம்மா ஊத்துக்குளி ஸ்டேஷன்ல இருந்து.. அந்தப் பையன் மேல கம்பளைன்ட் கொடுத்துருக்கிறாங்க...எங்க இருக்கீங்க?”

            அதிர்ச்சி மாறாமல் அவனைப் பார்த்து ஜாடை காட்டிப் பேசினாள்.

           என்னமா நான் பேசறது கேக்குதா?" என்ற குரலால் சற்று அமைதியானவள், "இங்க ஊட்டீல இருக்கறங்" என்றாள். "சரி விடியறதுக்குள்ள ஸ்டேஷனுக்கு ரண்டு பேரும் வந்துட்டா அந்தப் பையன் மேல கேஸ் இல்லாம பாத்துக்கிறேன்புரிஞ்சுதா" என்றார்.

              அவள் தொடர்ச்சியாக விசும்பல் ஏற "சரீங்...சரிங்" என்று சொல்வதிலேயே எதிர் முனையில் யாரோ மிரட்டுவது முத்துவுக்குத் தெரிந்தது. "போலீஸ் தா பேசுனது...விடியறதுக்குள்ளாற டேசன்ல இருக்கணுமாமா...இல்லீன்னா கேஸ் போடுவேன் அது இதுனு மெரட்டறாங்க. எனக்குப் பயமா இருக்குதுபேசாம நாம போயிறலாமாஎன்று கேட்டுக் கொண்டேஎல்லாம் என் தலைவிதிஎன்று தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்முகமெல்லாம் வியர்வை துளிர்க்க நடக்கப் போகும் கலவரத்தை எல்லாம் தெரிந்துதான் பேசுகிறாளா என்று குழம்பினான் முத்து.

            எங்கேயாவது சென்று வாழலாம் என்றுதான் இரண்டு பேரும் கிளம்பி வந்தார்கள். ஆனால் எங்கே போவது, எப்படி வாழ்வது என்ற எந்தத் திட்டமும் அவனிடம் இல்லை. எதை நம்பி இவன் பின்னால் போகிறோம் என்று அவளுக்கும் தெரியவில்லை. எது தன்னை இவ்வளவு தூரம் இழுத்துக் கொண்டு வர வைத்தது என்பதும் அவனுக்குப் புரியவில்லை. போதாக்குறைக்கு இவள் வேறு கண்டதைச் சொல்லி கலவரப்படுத்துகிறாள். இந்த சினிமாக்காரனுகளாவது ஓடிப்போன பின் எப்படி சமாளிக்கிறார்கள் என்று காட்டியிருந்தால் உதவியாக இருந்திருக்கும் என்று அந்த நேரத்திலும் தோன்றியது. எங்கே விபரீதம் புரியாமல் சிரித்துவிடுவோமோ என்று முகத்தை சோகமாக வைத்துக் கொண்டான். அப்பாவுக்குத் தெரியாமல் சிறுக சிறுக சேர்ந்திருந்த மொத்தப் பணமும் ஒரு வாரம் கூட தாங்காது போலிருக்க, தான் செய்தது சரியா தவறா என்று பகுத்தாராய்வது எல்லாம் இப்போது வேண்டாத ஆராய்ச்சி என்று தோன்றியது அவனுக்கு. கருப்பராயன் கோயில் பூசாரி சொன்ன வாக்கு நினைவுக்கு வந்தபோது கிளம்பி ஊர் போய் சேரத்தான் வேண்டுமா என்று வேறு யோசித்தான்.

         போன வெள்ளிக்கிழமை கம்பெனிக்கு லீவு போட வைத்து வலுக்கட்டாயமாக அவனை கோயிலுக்கு இழுத்துச் சென்றாள் முத்துவின் அம்மா. மண் பொம்மைகள், மணி தொங்கிய எலுமிச்சம் பழங்கள் செருகப்பட்ட ஏழடிக்கும் உயரமான வேல்கள், எண்ணெய் தோய்ந்து கருமை அப்பிக் கிடந்த கல் தூண்கள் நடப்பட்டிருந்த வாசலுக்கு முன்பு வாயில் வெள்ளை துண்டைக் கட்டியபடி பூசை செய்து கொண்டிருந்தார் பூசாரி. சுற்றிலும் கருவேல், வெள்ளை வேல், வேப்ப மரங்கள், கிளுவை, கள்ளி முள் புதர்கள். அந்த இடமே அமைதியில் அமானுஷ்யமாகத் தெரிந்தது. கையிலிருந்த தேங்காய், பழம், அரளிப் பூச்சரக் கூடையையும் எலுமிச்சம் பழங்களையும் பூசாரியிடம் கொடுத்தாள் அவன் அம்மா. அருகில் நின்றிருந்தவனை உற்றுப் பார்த்தார் பூசாரி.

 "இவன் என்ற மவந்தானுங்கொ...கலியாணங் காட்சி எதுவும் வேண்டாங்கறான்...பேச்ச எடுத்தாலே சண்டைக்கி நிக்கறானுங்கொஏன்னே தெரிலீங்கொ...கருப்பண்ணசாமிகிட்ட தின்னூரு வாங்கிப் போடலாம்னு வந்தமுங்..." என்று சொன்னாள்.

          வயதான பூசாரியின் கறுத்த புஜத்தில் நரம்புகள் நெளிந்து சென்றது பெரும் பாட்டாளி என்று உணர்த்தியது. கழுத்தில் கிடந்த ஸ்படிக மாலை வியர்வைத் துளியுடன் வெயில்பட்டு மினுங்கியது. இன்னும் சில பேர் தங்கள் கூடைகளை நீட்ட அதை வாங்கிக் கொண்டு கருப்பராயனின் புகழ் பாடும் ஏதோ பாடலை முணுமுணுத்தபடி சூடம் காட்டினார். பின்னர் சிலை முன்பு எலுமிச்சம் பழத்தைக் கைகளில் வைத்துக் கொண்டு உருட்டினார். வந்திருந்த ஐந்தாறு பேருக்கும் திருநீர், பழம், பூ எல்லாம் கொடுத்துவிட்டு திரும்பி முத்துவைப் பார்த்தார். கைகூப்பி கண் கசிய கும்பிட்டு கருப்பராயா என்று முனுமுனுத்தபடி நின்றாள் அவன் அம்மா.

          "மூனு அம்மாவாசைக்கு வந்துட்டுப் போக சொல்லாயா... அது வரைக்கும் நீயுங் கம்முனு இரு...அவனுங் கம்முனு இருக்கோணு...மத்ததெல்லாம் அப்பறம் பாக்கலாங்கறான்செரியா." என்றபடி பூசாரி அவன் கண்களை ஒரு நொடி உற்றுப் பார்த்தார். அதில் தெரிந்த உக்கிரப் பார்வை இருளில் தெரியும் ஏதோ ஒரு விலங்கினை நினைவூட்டியது. கருப்பராயன் உக்கிர தெய்வம் என்று அவன் தாத்தா சொல்லக் கேட்டிருக்கிறான். தன் மனதைப் பூசாரி மிகச் சரியாகப் படித்துவிட்டதாகப்பட்டது அவனுக்கு.

             "எப்பத்தா இவனுக்கு ஒரு கலியாணம் பண்றதுங்கொ.."என்று ஆதங்கத்துடன் கேட்டாள்.

              "மொதல்ல அவன கம்முனு இருக்கச் சொல்லாயா...அங்க இங்க சுத்தாமமத்ததெல்லா அப்பறம் பாத்துக்கலா" என்று திருநீறை அவன்  நெற்றியில் வைத்து இழுத்தார் பூசாரி.

             வீடு வரும் வரை அம்மாவும் மகனும் மாறி மாறி திட்டிக் கொண்டே வந்தார்கள். "இனி என்னை எந்தக் கோயிலுக்கும் கூப்பிடாத...உனக்கு இதே பொழப்பா போச்சு...நா இப்ப கலியாணம் பண்ணி வைய்யின்னு உன்னக் கேட்டனா...இனி கோயிலுக்கு கொளத்துக்குனு கூப்பிட்டீனா அப்பறமிருக்குது உனக்கு" என்று சீறிவிட்டு முன்னால் வேகவேகமாக நடையை எட்டிப் போட்டான்.

              "உங்கூட படிச்சவனெல்லாம் கல்யாணம் பண்ணி குடும்பங்குட்டீனு இருக்கறானுங்கொ...நீ இப்படி தண்டுவனாயிகூட மாடு மாதிரி சுத்தீட்டு திரியிறபெத்தவளுக்குத்தான்டா தெரியும்" என்று பதிலுக்கு குமுறினாள்.

             அவள் ஆவேசம் எல்லாம் வம்சம் தழைக்க வேண்டும் என்பதாகவும் இவனை இப்படியே விட்டால் இவ்வளவு காலமாக கஷ்டப்பட்டு மேலே வந்ததற்கு ஒரு அர்த்தமும் இல்லாமல் போய்விடும் என்ற வேதனையாகவும் இருந்தது. ஒரு ஆதாரமுல் இல்லாமல் காணாமல் போய்விட்ட குடும்பங்களின் சரித்திரங்களில் தமதும் ஒன்றாகி விடுவோமோ என்பதாகவும் அவளது கவலை இருந்தது.  தாய்க்கும் மகனுக்கும் எப்போதும் இது ஒரு போராட்டமாகவே இருந்தது.

             "என்ன நாஞ் சொல்றது சரிதான?” என்றவளிடம் என்ன என்றபடியே திரும்பிப் பார்த்தான் முத்து.             இங்கிருந்து போயிறலாம். தேடீட்டு இங்கேயே வந்தறப் போறாங்கஅப்பறம் உசுரோடவே இருக்க முடியாது..”என்றாள்.

              அங்க போனா மட்டும் என்ன நடக்கப் போவுது, அதே தான?”

                 ஏன்டா இப்படி பேசறஇல்லாட்டி என்ன நீயே கொன்னு போட்டுரு..செஞ்ச பாவம் அப்படியாவது போவட்டும்என்று எழுந்து அவனைக் கட்டிக் கொண்டாள்.

              செல்போன் தொடர்ச்சியாக அதிர அதிர இவனுக்குள் என்னவென்று சொல்ல முடியாத தவிப்பு வந்தது.

             சரி போனைக் கொடு. நா எஸ்..கிட்டப் பேசிப் பாக்கறேன்என்று அவளிடமிருந்த போனை வாங்கினான். எண்ணை அழுத்திக் காதில் வைத்தபடி கதவைத் திறந்து வெளியே வந்து வராண்டாவில் நின்றான். இரவின் பனி ஆசுவாசத்தைக் கொடுத்தது. ஆனால் அதை அனுபவிக்கும் நிலையில் தான் இல்லை என்ற எண்ணமும் முன்னால் வந்து நின்றது.

             சார் நா முத்து பேசறேன். வள்ளியும் நானும் பேசித்தான் முடிவு பண்ணி வந்தோம்என்று முடிப்பதற்குள் அடிங்என்று வசைபாடத் துவங்கினார் எஸ்.. “ஏன்டா ஊரு ஒலகத்துல உனக்கு எவளும் கிடைக்கலையா நீ காதல் பண்ணஇவ தான் கிடைச்சாளாஎன்று திட்டித் தீர்த்தார். “ஐயா ஏதோ ஒரு வேகத்துல நடந்துபோச்சுங்நாங் கூட்டிட்டு வந்தர்றேன் அவுங்க எங்கள ஒன்னும் பண்ணாம நீங்கதா காப்பாத்தனும்ங்என்று விசும்பினான். அப்போது அவன் குரல் நடுங்குவது அவனுக்கே அன்னியமாகவும் வியப்பாகவும் இருந்தது.

               என்ன முத்து, உனக்குப் பயமே கெடையாதாஎன்று இடுப்பில் தண்ணீர் குடத்துடன் அவன் வீட்டு முட்டுச் சந்தில் நின்று கொண்டு கேட்டாள் வள்ளி. “இதுல பயப்படறதுக்கு என்ன இருக்குதுரண்டு பேருக்கும் பிடிச்சிருக்குஒன்னா வாழப்போறோம்எல்லாத்துக்கும் வழியிருக்குதுல்லஎன்று அவள் கண்களுக்குள் பார்த்துச் சொன்னான்.  என்ன நம்பறயா இல்லையா?” என்று இறுதி முடிவு போலக் கேட்டான். அவன் எப்போதும் இப்படித்தான் பொசுக்கென கோபம் வந்து விளையாட்டுப் பையனைப் போலப் பேசுவான். ஆனால் தைரியம் அதிகம் உள்ளவன். “காதல் காதல் காதல்காதல் போயின் சாதல்னு நீ படிச்சதில்லையாஎன்று கேட்டவனிடம்அய்யா சாமீ உன் கவிதை போதும்இப்படிப் பேசிப் பேசியே என்னை அள்ளிக்கிட்டஎன்று வெட்கப்பட்டுச் சிரித்தபடி நடக்க முற்பட்டாள். “நாளைக்கு ஊட்டிக்கு கிளம்பறோம் ரெடியா இருஎன்றவனிடம் சரி என்பதா வேண்டாம் என்பதா என்ற குழப்பத்தில் ஒரு மார்க்கமாக தலையை அசைத்து வைத்தாள் வள்ளி.

             எல்லாம் நான் பேசிட்டேன். நைட்டு எந்நேரம் ஆனாலும் நீ அந்தப் புள்ளையக் கூட்டிக்கிட்டு நேரா ஸ்டேசனுக்கு வந்துருமத்தத அப்பறம் பார்த்துக்கலாம்வருலீன்னு வையிஎன்ன பண்ணுவேன்னே எனக்கே தெரியாது பார்த்துக்கோமயிரு காதலு கத்திரிக்காய்னு இருக்கிற பிரச்னையில இவனுக வேறஎன்ற கடுப்பு கலந்த மிரட்டலுடன் எதிர்முனையில் இணைப்புத் துண்டிக்கப்பட்டது.

             அறைக்கு உள்ளே வியர்வையுடன் வந்தவனை என்ன சொன்னாங்க என்பது போலப் பார்த்தாள். “விடியறக்குள்ளாற வரச் சொல்லி மெரட்றாருஎன்றான். ஏற்கெனவே அழுகையின் நுனியில் நின்று கொண்டிருந்தது அவளுக்கு வசதியாகப் போனது. தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுதாள். அவளைக் கட்டி அணைத்து அவனும் மனமுடைந்தான்.

               ஊருக்குப் பக்கமாக வந்தபோது இரவு 2 மணி ஆகியிருந்தது. நெடுஞ்சாலை நிறுத்தத்தில் பேருந்தில் இருந்து இறங்கியதும் கார் ஒன்று நின்றிருந்ததைப் பார்த்தான்.  அவனுக்கு எல்லாம் புரிந்தது.  டேய் பரதேசி நாயேபைக்ல ஏறுடாஎன்று ஒருவன் அருகே சர்ரென வந்து நின்றான். “நான் எதுக்குங் உங்க பைக்ல ஏறனும்வள்ளி எங்கபோலீஸ்காரங்க வருவாங்கனு எஸ்.. சொன்னாருஎன்று நடுங்கியபடியே கூறினான். “அந்த வௌக்கெண்ண நாயமெல்லாம் அங்க போயிப் பேசிக்கலாஅதுக்கு முன்னாடி ஒரு வேலை இருக்குது வாடாஎன்று கன்னத்தில் மாறி மாறி அறைந்தான் அவர்களுக்குத் தலைவன் போலிருந்தவன்.

         விடிய விடிய கண்ணிலிருந்து ரத்தம் கசிந்து கொண்டே இருந்தது. தொடையின் உள்பக்கமும் அடிவயிறும் எரிந்து கனன்று கொண்டிருந்தது. பிளந்து கிடந்த பாதமும் இனி ஒருபோதும் மண்ணில் நடந்து பார்க்க முடியாது எனக் கூறியது. வாழத் தகுதியில்லாத ஆணாகிவிட்டதாய் உணர்ந்தான்.

           விடிகாலையில் காவலுக்கு படுத்திருந்த அப்பாவையும் அம்மாவையும் தட்டுத் தடுமாறி எழுந்து சென்று குனிந்து பார்த்தான். முதுகா, பாதமா, கால்களா, மூட்டுகளா, கைகளா, கண்களா? இல்லை காதலா? எந்த வலி எங்கிருந்து வருகிறது என்று தெரியாத வேதனையின் உச்சிப்புள்ளியில் தவித்தான். கண்ணீருடன் ரத்தமும் இறங்கி பார்வையை மறைத்தது. கலங்கித் தெரிந்த இருவரையும் சில விநாடி பார்த்தபடி இருந்தான்.

            பின்னர் எழுந்து மெல்ல மெல்ல நடக்க ஆரம்பித்தான். மீண்டும் அவனுக்குப் பிடித்த அதே மணல் பாதை. இந்த முறை கால் வைக்க முடியவில்லை. பல்லாயிரம் ஊசிகளின் முனைகள் உடலின் உறுப்புகளில் எல்லாம் குத்தி நின்றன. ஒவ்வொரு அசைவுக்கும் பல்லாயிரம் ஊசிகள். லட்சம் துடிப்புகள். மெல்ல பாதத்தை எடுத்து வைத்தான். பேரானந்தம் ஏற்படுத்திய மண் புதைந்த பாதங்கள் இப்போது மரண வலியை ஏற்படுத்தின.

             அங்குலம் அங்குலமாய் ஊர்ந்து சென்று ரயில் பாதையின் ஓரத்தை அடைந்தான். மண்ணில் இழுத்து வந்த பாதச் சுவட்டில் ரத்தத்தால் கோடு போட்டிருந்தது. அந்தக் கோடு ஒரு வழிப் பாதையாகத்தான் இருக்கப் போகிறது எனத் தோன்றியது. ரயில் பாதை ஜல்லியில் கால் வைக்க முடியாமல் குப்புற விழுந்தான். மெதுவாக தவழ்ந்து சென்று ரயில் பாதையின் நடுவில் படுத்தான். தூரத்தில் கோவை எக்ஸ்பிரஸ் வரும் ரயிலின் ஓசை அவனுக்கு மெலிதாகக் கேட்டது.

             நான் என்ன சொன்னேன்நீங்க என்னடா பண்ணி வச்சுருக்கறீங்கஅந்தப் பையனக் கூட்டிட்டு நேரா ஸ்டேசன் தானே வரச் சொன்னேன்என்றார் எஸ்.. “அய்யா ஆத்திரத்துல  அவசரப்பட்டுட்டோம்... பார்த்துப் பண்ணிக்கலாம்ங்கஎன்று ஏட்டையாவிடம் கிசுகிசுத்தார்கள்.

        யோவ் கம்முனு போயிரு...மயிருபொண்டாட்டி புள்ளங்களை ஒழுங்கா வச்சுக்கத் துப்பில்ல இதுல பாத்து பண்றானுங்களாம்பாத்து...இனி கேசு உங்க மேலதான் எழுதணும்ஏட்டையா எல்லாரையும் வண்டில ஏத்துங்கஎன்று எரிச்சலுடன் சொல்லிவிட்டு ரயில் பாதையையே பார்த்துக் கொண்டிருந்தார் எஸ்..

             வள்ளியின் வீட்டினுள் தங்களைக் கட்டிக் கொண்டு அம்மா ஏன் அழுகிறாள் என்று  புரியாமல் விழித்தன அவளது இரு குழந்தைகளும். வள்ளியின் கணவன் இரவின் போதையால் தலையைப் பிடித்துக் கொண்டு குனிந்து அமர்ந்திருந்தான்.

             என்ற வம்சத்த குருத்துலயே அறுத்துப் போட்டியேடிசிரிச்சு சிரிச்சு ஒன்னுந்தெரியாத எம் மவன இப்படி பண்ணிப்போட்டயேடிஉனக்கு ஒரு புருசன் பத்தாதாடி? ஊரெல்லாம் புருசன் கேட்குதாடி சிறுக்கி முண்டஉன் குடும்பம் நாசமாத்தா போவுமடிநாசமாத்தா போவும்…” என  ஜீப்  சென்ற பாதையில் புரண்டு கொண்டே ஒரு நாளும் திரும்பி வராத தன் மகனை நினைத்துக் கதறிக் கொண்டிருந்தாள் முத்துவின் அம்மா.

நன்றி: நடுகல் 

Monday, April 11, 2022

நீதிக் கதை- லூயிஸ் க்ளக்



இரு பெண்கள் ஒரே உரிமைக்காக
அறிவுசான்ற அரசனிடம் வந்தனர். இரு பெண்கள்,
ஆனால் ஒரே ஒரு குழந்தை.
அரசனுக்குத் தெரியும்
ஒருவர் பொய் சொல்கிறார் என.
அவர் சொன்னது என்னவெனில்,
குழந்தையைப் பாதியாக
வெட்டுவோம்; அதனால்
யாரும் வெறுங்கையுடன்
செல்ல வேண்டுவதாகாது. அவர்
தன் வாளை உருவினார்.
பிறகு, இரு பெண்களில் ஒருவர்
தனது பங்கை தத்தம் செய்தார்:
இது தான் அறிகுறி, பாடம்.
ஒருவேளை
உங்கள் தாய்
இரு மகள்களிடையே பிய்க்கப்படுவதை
நீங்கள் பார்த்தால்
அவளைக் காக்க உங்களால்
என்ன செய்ய முடியும்
உங்களையே அழித்துக் கொள்ள
விரும்புவதைத் தவிர.
அவளுக்குத் தெரியும்
யார் உரிமையுள்ள குழந்தை என,
தாயைப் பங்கு போடுவதை
பொறுத்துக் கொள்ளாதவர்தான்.

-லூயிஸ் க்ளக். (கவிஞர், நோபல் பரிசாளர்-2020) #Wild_Iris தொகுப்பிலிருந்து A Fable என்ற கவிதை.

தமிழில்- க.ரகுநாதன்

சில்லவுட் புத்தர்



        நிழல் வெளியில் ஒரு வெளிக்கோட்டுருவத்தை ஏற்படுத்தும் சில்லவுட் போல மனதின் வெளிக்கோட்டுருவத்தை அதன் அமைதியைத் தருவது இந்தக் கவிதைத் தொகுப்பு. சில்லவுட் (silhouette) புத்தர் என்றால் நிழல்புத்தர் என்றும் மௌனமான, அமைதியான புத்தர் என்றும் பொருள் கொள்ளலாம். சித்ரன் ரகுநாத்  ஓவியர் என்பதால் இந்நூலுக்கு அழகிய அட்டையை அவரே வடிமைத்துள்ளார். கிண்டிலில் வெளியிடும் நூல்களுக்கு ஒரு அட்டைப் படம் எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்தும் வடிவமைப்பு.
        கவிதைகளில் உணர்வோட்டங்கள் எவ்வளவு முக்கியமோ அதே அளவு அமைதியும் முக்கியம். இத் தொகுப்பில் உள்ள கவிதைகள் ஆழ்மன வெளியின் கூறுகளை கண்முன் காட்சிப்படுத்திடும் வல்லமை கொண்டவையாக உள்ளன. “புத்தர் பார்க்க அழகாக இருக்கிறார்” என்ற கவிதையில் புத்தனின் ஆழ்ந்த அமைதியும் அதனால் மனதில் தொற்றிக் கொள்ளும் அசைவின்மையும் சில நொடிகளுக்கே நீடிப்பதை, பார்க்க மட்டும் தான் சுலபம், அவரை பின்பற்றுவது சுலபம் அல்ல என வெளிப்படுத்துகிறார்.

//நான் புத்தரைப் பின்பற்றுவதில் லை.
ஆசை துறப்பது இயலாத காரியம்.
புத்தர் பார்க்க அழகாக இருக்கிறார்.
அமைதியாக இருக்கிறார்.
என் மனக்குரங்கின் பரபரப்பை
ஐந்து விநாடிகள் அடக்குகிறார்.
புத்தர் என்னிடம் இருக்கிறார்.
புத்தரிடம் ஏதோ இருக்கிறது.//

    காலம் உறைந்து நிற்பதை நாம் பார்க்க முடியுமா என்ற கேள்விக்கு விடையாக உள்ளது “உறைந்த காலம்” கவிதை. கடிகாரம் நின்று போய்விட்ட நிலையில் அதன் காலத்தில் அது உறைந்து நிற்கிறது. அந்த நேரத்தில் நாம் செய்த/நினைத்த செயல்கள்/நினைவுகள் அப்படியே உணர்த்திக் கொண்டேயிருக்கிறது. ஒரு சிறு செய்கையில் அதனை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்து காலத்துடன் கலந்துவிட வைக்க முடியும். ஆனால் அதற்கு நமது நினைவுகள் காலத்துடன் இணைந்து ஓட வேண்டும்.

//உறைந்த காலத்தை
உயிர்ப்பிக்கத் தேவை
ஒரு நிப்போ அல்லது எவரெடி.
1.5 வோல்ட் போதும்.
ஆனால் இருப்பு இல் லை.
கிடைக்கும்வரை
கடிகாரமும் நானும்
மாறி மாறிப்
பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்..//

    குழந்தைகள் குதூகலத்தில் செய்கின்ற சேட்டைகளால் நாம் அடையும் ஆனந்தத் தொல்லை நம் பால்யத்திற்கும் கடத்திச் செல்கிறது.

//…குழந்தைகள்
வளர்வதைப்
பார்ப்பதும் வெகு அழகு….//
//…உலகம் அழகாக
இருக்க வேண்டுமென்றால்
குழந்தைகள் வளராமல்
இருக்க வேண்டும்….//

    அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தினோடுதான் இனி வரும் காலம் செல்லப் போகிறது. அதன் வளர்ச்சிக்கும் சென்று சேரும் இலக்கிற்கும் எல்லையே இல்லை. பயணங்களே தொழில்நுட்பங்களிடம் கையளிக்கப்பட்டுவிட்டது. இனி நாம் அதை விட்டாலும் அது நம்மை விடப்போவதில்லை.

//என் னை நீ உயிர்ப்பிக்கும்போது
உன் பயணங்களை
நான் உயிர்ப்பிக்கிறேன்.
நான் கூகிள் வரைபடத்தில்
ஜீப்பீயெஸ் தோய்த்த அம்புக்குறி.//
//…முன்னே நிற்கிறாள்.
மெல்லிய நுண்ணறிவால்
தானே கற்கிறாள்.
அவளின்றி அனுதினமும்
அசையாது இனி
பெயரைக் கேட்டால்
அலெக்ஸா என்கிறாள்.//

    நாள்தோறும் எத்தனை பறவைகளை விலங்குகளைப் பார்க்கிறோம். அழகாய் இருப்பனவற்றை நம் காமிராக்களில் பிடித்துக் கட்டி வைக்கிறோம். டிஸ்கவரி, நேட்ஜியோ சானல்களில் திரை முழுவதும் தெரியும் ஒரு பருந்து அல்லது பறவையின் பெருங்கண் ஒரு கணம் மூடி விழிப்பதை இந்த வரிகளில் கண்டு கொள்ள முடிகிறது. பறவைகள் பலவிதம் போல, அவற்றை படம் பிடிக்கும் மனிதர்களும் காணும் மனிதர்களும் பலவிதம் என்பது உண்மைதானே.

//…டியெஸ்ஸெல்லார் ஐரிஸ்
கண் சிமிட்டல்களில் சிக்கி….//

    இணையத்தில் என்னவெல்லாம் சாத்தியம் என்பது ஒருபுறமிருந்தாலும் அந்த சாத்தியக்கூறுகளை நிதர்சனப்படுத்தும் திறன் கொண்ட தொழில்நுட்பம் இல்லாமையைக் கிண்டலடிக்கும் கவிதை இது.

//…துரிதம் சாத்தியமில்லாத பீயெஸ்ஸென்னல்
கருணையற்ற ஜியோ.
நீ ஒரு தவிர்க்க முடியாத
அவஸ்தை!...//

    இயற்கையைப் பாடாத கவிஞர் இல்லை. வறட்சியில் சிக்கித் தவிக்கும் இப்பூமி அந்த ஆண்டில் ஒரே ஒரு மழைத் துளியை சொட்டினால் என்னவாகும்? அதை யார் ஏந்திக் கொள்வார்? அதையும் இந்த இயற்கைதான் பெறும். ஒரு ஒற்றை விதையிலை அமேசான் காட்டில் இருந்தபடி அதைப் பெற்றுக் கொள்கிறது.

//வறண்ட அமேசான் நதிப்படுகையில்
நிலம் கிளர்த்தெழுந்த விதையிலை
யாருமறியாமல் தன் கரத்தால்
ரகசியமாய் அதை வாங்கிக் கொண்டது.
நாலாயிரத்துக்குள் அது மரமாகும்//

    ஆண்களுக்கு மட்டும் என்ற கவிதை நினைவூட்டிச் செல்வதோ சிலிர்ப்பூட்டும் வரைபடக் கனவுகள். சப்வேயில் துப்பிச் சென்ற பான்பராக் வடிவங்களிலும் சில கவிதை வரிகள் வந்து செல்கின்றன. எதிரே வரும் வாகனத்தின் ஒளி கண்ணொளியை சில நொடிகள் இருளாக்குவது எல்லோருக்கும் ஏற்படும் அனுபவம்.

//வாய்களுக்கும் சுவர்களுக்குமான பந்தம்
சப்வே சுவரின் பான்பராக் துப்பல்கள்.//

    உலகம் நிகழ்தகவில் அடங்கி இருக்கிறது. எல்லாமே ஒருமுறை நிகழ்வதாக இருக்கிறது. அதே அனுபவம் அதே போன்ற நிகழ்வெனினும் அதில் வேறுபாட்டிற்கான சாத்தியங்கள் நிறைந்தே இருக்கும்.

//ஒருமுறைகளால் நிறைந்த உலகம் இது….//

    நம் கண் பார்வையின் துல்லியம் புற நிகழ்வுகளின் நிழல் வீச்சுகளைப் பொருத்து மாறுபடுகிறது. நமது பார்வை மனதளவில் இருந்தாலும் புற விஷயங்கள் அதை கட்டுப்படுத்துகின்றன.

//…கூட்டலும் கழித்தலுமான
எண்களால் நிச்சயிக்கப்படுகிறதென்
புறப்பார்வை.//

    தன் அகப் பார்வையை முன் வைக்கும் கவிஞர் எவ்வளவு முயன்றாலும் மன அமைதியை அகத்தின் ஒலியைக் கேட்கும்/ ஒளியைப் பார்க்கும் அளவு வெற்றி பெற இயலாத நிலையைக் கவிதையாக்குகிறார்.

//…இருப்புக்கொள்ளாத நிலையில்
இறை காண்பதெப்படி?
ஐம்புலன்களின் கதவுகளையும்
ஒரு சேரத் திறந்து வெளியேறி
பழகிய வழியில் கலந்தான்.//

    'சில்லவுட் புத்தர்' மனத்தின் வெளிக்கோட்டுருவமாக உருவாகி உள்ளது. அதன் சித்திரம் கவிதையை வாசிப்பவரின் மனதில் உருவாகி முழுமையடையக் கூடும்.


சில்லவுட் புத்தர் - சித்ரன் ரகுநாத்
கிண்டில் வெளியீடு
பக்கங்கள்: 44