Pages

Monday, April 11, 2022

பினாச்சியோ




    எங்கள் வீட்டிற்கு வந்த உறவினர் ஒருவர் கொடுத்துச் சென்ற படக்கதைகள் நிறைந்த ஒரு மாத இதழைத் தேடி எங்கள் சிற்றூரில் இருந்த பெட்டிக் கடையில் விசாரித்த போது எனக்கு 8 வயது இருக்கலாம். அப்போது வியாசபாரதம் என்ற நூல் ஒன்றையும் அவர் கொடுத்திருந்தார். அதை கொஞ்சம் பக்கம் படிக்கும் முன்பே திரும்ப வாங்கிச் சென்றார். அதற்குப் பதிலாக அவர் அளித்தது தான் அந்த இதழ். பச்சை வண்ணப் படக்கதையில் முயலும் மையும் பேசியது ஆனந்தம் அளித்தது. இதழின் பெயர் பூந்தளிர். அது கிடைக்கவே இல்லை. பின்னர் அம்புலிமாமா, பாலமித்ரா என வாசிப்பு விரிந்தது.
    சிறுவர் கதைகள் நீதி கூறுவதாகவும் அறிவுரைக் கதைகளாகவும் ஒரு ஊரில் ஒரு ராஜா எனத் துவங்குவதாகவும் இருக்கும். பதின்ம வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினர் மட்டுமல்லாது தீவிர இலக்கிய வாசகர்களின் வாசிப்புக்கு ஏற்ற உலகப் புகழ்பெற்ற நூல் ஒன்றை வாசிக்க நேர்ந்தது. கார்லோ கொலோடி எழுதிய பினாச்சியோ. தமிழில் அற்புதமாக மொழிபெயர்ப்பு செய்துள்ளார் கவிஞரும் எழுத்தாளருமான யூமா.வாசுகி.
    பெரும்பாலான சிறுவர் கதைகள் கதையை விவரித்தபின் எனவே அன்புக் குழந்தைகளே நாம் இப்படி செய்யக் கூடாது என்பதாக முடியும். ஆனால் பினாச்சியோவில் கதை ஓட்டத்தில் நுட்பமான விவரணைகளின் இடையே தனது அறிவுரைகளைச் சேர்த்துள்ளார் கார்லோ. பெற்றோரை மதிக்காத, புத்தக வாசிப்பை விரும்பாத, பள்ளிக்குச் செல்ல விரும்பாத, பொய் பேசும், ஏமாற்றும் குழந்தைகள் மிகுந்த துன்பம் அனுபவிப்பர் என்னும் நீதி தான் கதையின் மையம்.
    பினாச்சியோ (பினோக்கியோ என்கிறது விக்கி) ஒரு மரபொம்மையாக இருந்து சிறுவனாக மாற முயற்சிப்பவன். ஆனால் அதற்காக அவன் படும் துன்பங்களும் இருளின் முடிவில் எழும் ஒளிபோன்ற தீர்வுகளுமே இக்கதையை செவ்வியல் தன்மை கொண்டதாக ஆக்கியுள்ளது.
    கெபட்டோ எனும் தச்சர் ஒரு மரக்கட்டையை பொம்மையாக செதுக்க அது பேசத் துவங்குகிறது. பொய் பேசினால் அதன் மூக்கு வளர்ந்து சென்று சுவரில் இடிக்கிறது. பள்ளிக்குச் செல்லும் வழியில் பொம்மலாட்டம் பார்க்கிறான். அங்கு அந்த பொம்மைகளுடன் விளையாடுகிறான். அங்கிருந்து வெளியே செல்லும் போது அவனிடம் இருந்த தங்க நாணயங்களைத் திருட நரியும் பூனையும் திட்டம் போட்டு ஏமாற்றுகின்றன. இதற்கிடையில் பினாச்சியோவைத் தேடி கெபட்டோ அலைகிறார். ஒரு மரத்தில் அவனைக் கட்டித் தொங்கவிடுகின்றன நரியும் பூனையும். அப்போது நீலநிறத் தலைமுடி கொண்ட தேவதை வந்து காப்பாற்றி நல்ல பையனாக இருப்பதன் அவசியத்தை உணர்த்துகிறது. அவளை அம்மாவாக ஏற்கிறான். மீண்டும் அங்கிருந்து செல்லும் வழியில் சிறுவர்களை எப்போதும் விளையாடி மகிழும் முட்டாள்களின் தேசத்திற்கு ஒரு வண்டிக்காரன் அழைத்துச் செல்வதாக பினாச்சியோவின் நண்பன் ரோமியோ என்கிற மெழுகவர்த்தி சொல்கிறான். அங்கு சென்றபின் இருவரும் கழுதையாகின்றனர். ஒரு வியாபாரியிடம் விற்கப்பட்டு அவனிடமிருந்து தப்பித்து கடலில் ஒரு மீன் வாயில் சிக்குகிறான். அங்கே அவனது தந்தை கெபட்டோவை சந்தித்து தப்புகிறான். மெழுகுவர்த்தியின் முடிவு சோகமயமானது. இறுதியில் பினாச்சியோ ஒரு சிறுவனாக உருமாறுகிறான்.
    இத்தாலியில் பிறந்த கார்லோ மதக் கல்வி பெற்றவர். இத்தாலிய சுதந்திரப் போரில் பத்திரிகையாளராகப் பணியாற்றினார். 1848ல் தொடங்கிய இவரது பத்திரிகை 1849ல் தடை செய்யப்பட்டது. குழந்தைகளுக்கான அதிபுனைவுக் கதைகளை எழுதினார். 1881ல் பினாச்சியோவின் முதல் அத்தியாயம் பிரசுரமானது. 1882ல் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியாகி உலகப் புகழ் பெற்றது. 2012ல் தமிழில் வெளியானது.
    இந்தக் கதை திரைப்படங்களாகவும் வந்துள்ளன. 1940ல் வால்ட் டிஸ்னி சார்பில் அனிமேஷன் அதிபுனைவு சாகசப் படமாக வந்துள்ளது. உலக இலக்கிய வாசகர்கள், குழந்தைகளைக் கவர்ந்த Pinocchio வின் கதை திரைப்படமாக 2020 கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகிறது.

    எங்கே கதைவெளி விரிகிறது எங்கே அறிவுரை கூறப்படுகிறது எனப் பிரித்தறிய முடியா அதிபுனைவு சாகச நாவலான பினாச்சியோ சிறுவர்கள் மட்டுமன்றி இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்.

நூல்: பினாச்சியோ
கார்லோ கொலோடி
தமிழில்: யூமா. வாசுகி
பாவை பப்ளிகேஷன்ஸ்

பக். 208, ரூ.125 (2012ல்) 

No comments: