Pages

Sunday, April 10, 2022

ஒளியை விழுங்கிய நட்சத்திரம்

 

ஒரு நட்சத்திரம் ஆக

உருவாகிவிட்டவனுக்கு

நடை உடை பாவனை எல்லாம்

பால்வெளியின் வண்ணங்கள் குழைந்து

முகமெல்லாம் ஒளிரத் தொடங்குகிறது.


தானொரு ஒளிமீன் என

நம்பிக்கையின் அதீத கதிர்களால்

தலையில் கிரீடம் ஏற்றப்பட்ட அவன்

தன்னருகே நெருங்கி வரும்

எந்தவொரு விண்மீனையும்

அளவான ஒளிர்தலுக்கு

பணித்துவிடுகிறான்.


ஒளிவீச்சின் கதிர்களால்

பொய்யேற்றி வளர்க்கப்பட்ட அவன்

பூமியை நெருங்கி நின்று

பழைய ஒளிமீன்கள்

பற்றியிருக்கும் உயிர்களை

கவர்ந்துவிட தன்னுடல்

வீங்குமளவு ஒளியை உமிழ்கிறான்.


பற்றிய கரத்தின் வெம்மையால்

மயங்கிக் கிடக்கும் உயிர்களெல்லாம்

இன்னுமொரு நட்சத்திரவாசத்தை ஏற்க மறுத்து

அவன் ஒளியை சிதறடிக்கின்றன

இருள் வெளியில்.


சிம்பொனிகளால் கட்டமைந்த தன் வாழ்வினை

தெருவோர பக்கவாத்திய

ஆலாபனைகளால் ஒளியேற்றிவிட

இயலாத தருணமொன்றில்

ஒளியே இருள்

இருளே ஒளியெனக் கூறி

நட்சத்திர சாபமிட்ட விநோத நாவால்

தன் ஒளியை தானே

விழுங்கிச் செரித்து அணைகிறான்.


நன்றி: வாசகசாலை.காம்

No comments: