Pages

Monday, April 11, 2022

மணல்


வெண்நுரை தவழும் அலையில்
விழுந்து மிதந்து அமிழ்ந்து எழுந்து
கரையேறி வீடு செல்லும்
சிறுவனின் மனதில்
சட்டைப் பையில்
எஞ்சியிருக்கிறது கடல்.

*

அகம்போக்கு

காதல் என்பது வடிவழகில் இல்லை
கவிதை என்பதும் வரிகளில் இல்லை
காமம் என்பது குறிகளில் இல்லை
கவிதை என்பதும் சொற்களில் இல்லை
காலம் என்பது முள் நகர்வில் இல்லை
கவிதை என்பதும் எழுத்தில் இல்லை
காதல்
காமம்
காலம் எல்லாம் அகமெனில்
கவிதை மட்டும் புறம்போக்கா?

கவிதை ஓர் அகம்போக்கு

*

உப்பு

ருசியின் சாரம் உப்பில் இருக்கிறது

மிகை கொள்வதும் குறை கொள்வதும்
சக்கையை நினைவூட்டும்
உனக்கான காதலையும்
உப்பிட்டு வைக்கிறேன்
யுகங்கடந்த பின்பும்
சரியான பதத்தில் ருசித்திட.

நன்றி: யாவரும்.காம்


No comments: