மஞ்சள் உடலில்
சிவப்பு செவ்வகங்களும்
ஒடிந்துபோய் ஒரு நூலில்
தொங்கும் கொம்பும் கொண்டு
கதவிடுக்கில் படுத்திருக்கிறது
ஒட்டகச்சிவிங்கி எனப்
பெயரிடப்பட்ட பப்பு.
கைகளில் நடனமும்
கால்களில் உதை அசைவுகளும்
கண்களில் சிரிப்பும் காட்டி
ஒரு கண்ணை இழந்து
குடல் பஞ்சை வெளித்தள்ளி
விட்டத்தை வெறிக்கிறது
பாண்டா கரடியாகிய
குங்ஃபூ பாண்டா.
துரத்துவதற்கு எலி எனப் பெயரிட்ட
ஜெர்ரி இல்லாததால்
பூனை என்றழைக்கப்படும் டாம்
சுவரையே பார்த்து நிற்கிறது.
உதவி கேட்கும்
நோபிட்டோ இல்லாததால்
எல்கேஜி புத்தகப்பையில்
கையசைக்கிறது
மியாவ் பூனை என்ற டோரேமான்.
வேட்டைக்காரன் என்ற லாகர்ஹெட்டும்
ஆமைக் குஞ்சான்கள்
ம்யூட்டட் நிஞ்சா டர்டில்சும்
சுகர் லெவலை சரியாக
வைத்திருக்கப் பாடுபடும்
பராக்கிரமசாலி சோட்டா பீமும்
இன்ஸ்பெக்டர் வேலை பார்க்கும்
சிங்கம் சாரும்
ஆபத்தில் உதவும்
சின்னப் பையன் என
சொல்லக் கூடாத ராஜுவும்
எங்கென்றாலும் வழிகாட்டும்
குட்டிப் பிள்ளை டோராவும்
குரங்குப் பிள்ளை புஜ்ஜியும்
வீடு என்றழைக்கும்
வெறிச்சோடிய கட்டடத்திற்குள்
தனியே அமர்ந்திருக்கும் எனைக்
கேள்விகளோடு பார்க்கிறார்கள்.
பாட்டி வீடு
எனப் பெயரிட்ட கிராமத்தில்
நேற்று ஈன்ற வெள்ளாட்டுக் குட்டிகளை
கையிலேந்தி முத்தமிட்டுக் கொஞ்சும்
குட்டிப் பையனை
வீடியோ அழைப்பில் பார்த்து
புன்னகையோடு அருள்கிறார்கள்
மோட்டு என்கிற பிள்ளையாரும்
பட்லு என்கிற முருகனும்.
No comments:
Post a Comment