Pages

Monday, April 11, 2022

சில்லவுட் புத்தர்



        நிழல் வெளியில் ஒரு வெளிக்கோட்டுருவத்தை ஏற்படுத்தும் சில்லவுட் போல மனதின் வெளிக்கோட்டுருவத்தை அதன் அமைதியைத் தருவது இந்தக் கவிதைத் தொகுப்பு. சில்லவுட் (silhouette) புத்தர் என்றால் நிழல்புத்தர் என்றும் மௌனமான, அமைதியான புத்தர் என்றும் பொருள் கொள்ளலாம். சித்ரன் ரகுநாத்  ஓவியர் என்பதால் இந்நூலுக்கு அழகிய அட்டையை அவரே வடிமைத்துள்ளார். கிண்டிலில் வெளியிடும் நூல்களுக்கு ஒரு அட்டைப் படம் எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்தும் வடிவமைப்பு.
        கவிதைகளில் உணர்வோட்டங்கள் எவ்வளவு முக்கியமோ அதே அளவு அமைதியும் முக்கியம். இத் தொகுப்பில் உள்ள கவிதைகள் ஆழ்மன வெளியின் கூறுகளை கண்முன் காட்சிப்படுத்திடும் வல்லமை கொண்டவையாக உள்ளன. “புத்தர் பார்க்க அழகாக இருக்கிறார்” என்ற கவிதையில் புத்தனின் ஆழ்ந்த அமைதியும் அதனால் மனதில் தொற்றிக் கொள்ளும் அசைவின்மையும் சில நொடிகளுக்கே நீடிப்பதை, பார்க்க மட்டும் தான் சுலபம், அவரை பின்பற்றுவது சுலபம் அல்ல என வெளிப்படுத்துகிறார்.

//நான் புத்தரைப் பின்பற்றுவதில் லை.
ஆசை துறப்பது இயலாத காரியம்.
புத்தர் பார்க்க அழகாக இருக்கிறார்.
அமைதியாக இருக்கிறார்.
என் மனக்குரங்கின் பரபரப்பை
ஐந்து விநாடிகள் அடக்குகிறார்.
புத்தர் என்னிடம் இருக்கிறார்.
புத்தரிடம் ஏதோ இருக்கிறது.//

    காலம் உறைந்து நிற்பதை நாம் பார்க்க முடியுமா என்ற கேள்விக்கு விடையாக உள்ளது “உறைந்த காலம்” கவிதை. கடிகாரம் நின்று போய்விட்ட நிலையில் அதன் காலத்தில் அது உறைந்து நிற்கிறது. அந்த நேரத்தில் நாம் செய்த/நினைத்த செயல்கள்/நினைவுகள் அப்படியே உணர்த்திக் கொண்டேயிருக்கிறது. ஒரு சிறு செய்கையில் அதனை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்து காலத்துடன் கலந்துவிட வைக்க முடியும். ஆனால் அதற்கு நமது நினைவுகள் காலத்துடன் இணைந்து ஓட வேண்டும்.

//உறைந்த காலத்தை
உயிர்ப்பிக்கத் தேவை
ஒரு நிப்போ அல்லது எவரெடி.
1.5 வோல்ட் போதும்.
ஆனால் இருப்பு இல் லை.
கிடைக்கும்வரை
கடிகாரமும் நானும்
மாறி மாறிப்
பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்..//

    குழந்தைகள் குதூகலத்தில் செய்கின்ற சேட்டைகளால் நாம் அடையும் ஆனந்தத் தொல்லை நம் பால்யத்திற்கும் கடத்திச் செல்கிறது.

//…குழந்தைகள்
வளர்வதைப்
பார்ப்பதும் வெகு அழகு….//
//…உலகம் அழகாக
இருக்க வேண்டுமென்றால்
குழந்தைகள் வளராமல்
இருக்க வேண்டும்….//

    அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தினோடுதான் இனி வரும் காலம் செல்லப் போகிறது. அதன் வளர்ச்சிக்கும் சென்று சேரும் இலக்கிற்கும் எல்லையே இல்லை. பயணங்களே தொழில்நுட்பங்களிடம் கையளிக்கப்பட்டுவிட்டது. இனி நாம் அதை விட்டாலும் அது நம்மை விடப்போவதில்லை.

//என் னை நீ உயிர்ப்பிக்கும்போது
உன் பயணங்களை
நான் உயிர்ப்பிக்கிறேன்.
நான் கூகிள் வரைபடத்தில்
ஜீப்பீயெஸ் தோய்த்த அம்புக்குறி.//
//…முன்னே நிற்கிறாள்.
மெல்லிய நுண்ணறிவால்
தானே கற்கிறாள்.
அவளின்றி அனுதினமும்
அசையாது இனி
பெயரைக் கேட்டால்
அலெக்ஸா என்கிறாள்.//

    நாள்தோறும் எத்தனை பறவைகளை விலங்குகளைப் பார்க்கிறோம். அழகாய் இருப்பனவற்றை நம் காமிராக்களில் பிடித்துக் கட்டி வைக்கிறோம். டிஸ்கவரி, நேட்ஜியோ சானல்களில் திரை முழுவதும் தெரியும் ஒரு பருந்து அல்லது பறவையின் பெருங்கண் ஒரு கணம் மூடி விழிப்பதை இந்த வரிகளில் கண்டு கொள்ள முடிகிறது. பறவைகள் பலவிதம் போல, அவற்றை படம் பிடிக்கும் மனிதர்களும் காணும் மனிதர்களும் பலவிதம் என்பது உண்மைதானே.

//…டியெஸ்ஸெல்லார் ஐரிஸ்
கண் சிமிட்டல்களில் சிக்கி….//

    இணையத்தில் என்னவெல்லாம் சாத்தியம் என்பது ஒருபுறமிருந்தாலும் அந்த சாத்தியக்கூறுகளை நிதர்சனப்படுத்தும் திறன் கொண்ட தொழில்நுட்பம் இல்லாமையைக் கிண்டலடிக்கும் கவிதை இது.

//…துரிதம் சாத்தியமில்லாத பீயெஸ்ஸென்னல்
கருணையற்ற ஜியோ.
நீ ஒரு தவிர்க்க முடியாத
அவஸ்தை!...//

    இயற்கையைப் பாடாத கவிஞர் இல்லை. வறட்சியில் சிக்கித் தவிக்கும் இப்பூமி அந்த ஆண்டில் ஒரே ஒரு மழைத் துளியை சொட்டினால் என்னவாகும்? அதை யார் ஏந்திக் கொள்வார்? அதையும் இந்த இயற்கைதான் பெறும். ஒரு ஒற்றை விதையிலை அமேசான் காட்டில் இருந்தபடி அதைப் பெற்றுக் கொள்கிறது.

//வறண்ட அமேசான் நதிப்படுகையில்
நிலம் கிளர்த்தெழுந்த விதையிலை
யாருமறியாமல் தன் கரத்தால்
ரகசியமாய் அதை வாங்கிக் கொண்டது.
நாலாயிரத்துக்குள் அது மரமாகும்//

    ஆண்களுக்கு மட்டும் என்ற கவிதை நினைவூட்டிச் செல்வதோ சிலிர்ப்பூட்டும் வரைபடக் கனவுகள். சப்வேயில் துப்பிச் சென்ற பான்பராக் வடிவங்களிலும் சில கவிதை வரிகள் வந்து செல்கின்றன. எதிரே வரும் வாகனத்தின் ஒளி கண்ணொளியை சில நொடிகள் இருளாக்குவது எல்லோருக்கும் ஏற்படும் அனுபவம்.

//வாய்களுக்கும் சுவர்களுக்குமான பந்தம்
சப்வே சுவரின் பான்பராக் துப்பல்கள்.//

    உலகம் நிகழ்தகவில் அடங்கி இருக்கிறது. எல்லாமே ஒருமுறை நிகழ்வதாக இருக்கிறது. அதே அனுபவம் அதே போன்ற நிகழ்வெனினும் அதில் வேறுபாட்டிற்கான சாத்தியங்கள் நிறைந்தே இருக்கும்.

//ஒருமுறைகளால் நிறைந்த உலகம் இது….//

    நம் கண் பார்வையின் துல்லியம் புற நிகழ்வுகளின் நிழல் வீச்சுகளைப் பொருத்து மாறுபடுகிறது. நமது பார்வை மனதளவில் இருந்தாலும் புற விஷயங்கள் அதை கட்டுப்படுத்துகின்றன.

//…கூட்டலும் கழித்தலுமான
எண்களால் நிச்சயிக்கப்படுகிறதென்
புறப்பார்வை.//

    தன் அகப் பார்வையை முன் வைக்கும் கவிஞர் எவ்வளவு முயன்றாலும் மன அமைதியை அகத்தின் ஒலியைக் கேட்கும்/ ஒளியைப் பார்க்கும் அளவு வெற்றி பெற இயலாத நிலையைக் கவிதையாக்குகிறார்.

//…இருப்புக்கொள்ளாத நிலையில்
இறை காண்பதெப்படி?
ஐம்புலன்களின் கதவுகளையும்
ஒரு சேரத் திறந்து வெளியேறி
பழகிய வழியில் கலந்தான்.//

    'சில்லவுட் புத்தர்' மனத்தின் வெளிக்கோட்டுருவமாக உருவாகி உள்ளது. அதன் சித்திரம் கவிதையை வாசிப்பவரின் மனதில் உருவாகி முழுமையடையக் கூடும்.


சில்லவுட் புத்தர் - சித்ரன் ரகுநாத்
கிண்டில் வெளியீடு
பக்கங்கள்: 44

No comments: