Pages

Thursday, February 3, 2011

சாத்தாளின் அருள் மாளிகை







கடவுளா சாத்தாளா
என்ற கேள்வி  எழுந்தபோது
ஒரு நீலப்படம் பார்ப்பது என
அவர்களுக்குள் முடிவானது.

புழுதி பறந்த தார்ச்சாலையைக் கடந்து
தலை மறைத்துச்  சென்ற இடத்தில்
மழை குடித்து வெயில் தின்ற
சுவரில் முதலில்  தொங்கியது
சாத்தாளின் அந்தரங்க அருள் மாளிகை.


சாத்தாளைத் தரிசிக்க
வயதுக் கணக்கை கேட்டவனிடமிருந்து
விரல்களால் வரைந்து பெற்ற
வரைபடத்தில் நுழைந்தபோது
புகையும் நிணமும் அலைந்தபடி
அவள் புகழ் பாடிக் கொண்டிருந்தன.

யுகங் கடந்த வயோதிகன்
மரணத்தின் முகவரியை
அழித்து அழித்து எழுதியவன்
பெரு விருப்பு கொண்ட இளைஞன் என
எல்லோரது நரம்புகளிலும்
சாத்தாள் சாத்தாள் சாத்தாள் என
சொட்டுச் சொட்டாக
காமம் கடந்து சென்றது
பருத்தகன்ற ஸ்தனங்களுடன்.

கடவுள்கள் மயங்கி
நீலம் தவிர்த்த வண்ணங்கள்
கரைந்து போன பின்
சாத்தாளின் பார்வைகளையும்
முனகல்களையும் வளைவுகளையும்
தலையில் சுமந்தபடி
பெருங்காமத்தோடு
வெளியேறியவர்களிடம்
கேள்வியை வீசிச் சிரித்தனர்
சாத்தாளும் கடவுளும்.

நன்றி: உயிரோசை

No comments: