Pages

Showing posts with label வாசிப்பு. Show all posts
Showing posts with label வாசிப்பு. Show all posts

Monday, April 11, 2022

அலிமா எனும் அற்புதப் படைப்பு



        "இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது என்று வேண்டுமானால் கேளுங்கள். இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும் எனக் கேட்டு தப்பித்துக்கொள்ள பார்க்காதீர்கள்" என்று தன் நாவல் ஒன்றின் துவக்கத்தில் கூறுவார் ஜி. நாகராஜன்.
    அதுபோல், 'இந்தப் பிரதியில் ஏன் இத்தனை வீச்சமடிக்கிறது எனக் கேட்காதீர்கள். இந்த சமூக அமைப்பு ஏன் இத்தனை அலங்கோலமாயிருக்கிறது என்று வேண்டுமானால் கேளுங்கள்' என்ற வரிகளே கீரனூர் ஜாகிர்ராஜாவின் 'வடக்கேமுறி அலிமா' நாவலைப் படிக்கத் தூண்டியது. சுவாரஸ்யத்திற்கு குறைவில்லாத நாவல்.
    கதை என்ன என்பதை விட இதன் நாயகி(?) அலிமா யார் என்ற கேள்விகளே இப் பிரதியைச் சுற்றி அலைகின்றன. ஒரு வசதிக்காக வடக்கேமுறி அஹமதுக்குட்டி-பாத்துமா தம்பதியின் மகள் அலிமா என்று நினைவில் கொள்ளலாம். ஆனால் அலிமா அதுவல்ல!.
    நூலின் துவக்கத்தில் அலிமா பற்றி ஊரார் கூறும் பட்டியலில் 13 சித்தரிப்புகள் உள்ளன. ஆனால் அதுதான் அலிமாவா என்றால் அதுவுமல்ல. வாசித்தபின் அதற்கு அப்பால் வேறொரு பட்டியல் நம்முள் விரிகிறது.
    வடக்கேமுறி இல்லத்தில் இருந்து வெளியேறி முஸ்லியாருடன் செல்கிறாள். அவரது மாயத் தந்திரத்தில் இருந்து விலகி மம்மதுவுடன் வெளியேறுகிறாள். அவளது பெரியப்பா ஒரு எழுத்தாளர். அவர் மலபார் நாடோடி என்று எழுதும் நாவலின் அனைத்து நிகழ்வுகளும் அலிமாவின் வாழ்வில் பிரதிபலிக்கின்றன. அதைப் பார்த்து அவர் அச்சமடைகிறார். அவர் மனைவி எழுத்தாளர்களைக் கொல்ல வேண்டும் என்கிறாள்.
    கேரளாவின் வடக்கேமுறியில் கயிறு வணிக கம்பெனியில் பணியாற்றும் குமாஸ்தாக்கள் கதை ஒரு புறம் செல்கிறது. அதன் எதிரே மளிகைக் கடை வைக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஷேக் அலிமாவை மணமுடிக்க ஆசைப்படுகிறான். அலிமாவின் துபாய் மாமா பையனும் விரும்புகிறான். அலிமா மனநலம் குன்றியவள் என்று மருத்துவர்கள் சிறு வயதில் சொன்னது தெரிந்துதான் அவர்கள் இவ்வாறு ஆசைப்பட்டனரா எனத் தெரியாது. ஆனால் அலிமாவின் நாட்டமோ வேறு.
    இஸ்லாமிய இடுகாடான கபுர்ஸ்தானில் சிறு வயதில் தோழன் கபூருடன் கபுறுக்களி ஆடுகிறாள். பட்டாம்பூச்சியைப் பிடிக்க புதைக்கப்பட்டவர்களின் மேலேறி ஓடுகிறார்கள். சில இடங்களில் நின்று கேள்வி எழுப்புகிறாள்.

"தொழுதியளா?"
"காசு உண்டாக்கினீங்கோ, ஹஜ் செஞ்சியளா?"
"பிச்சக்காரன பக்கீர்களத் துரத்தியடிச்சீங்களா?"
"வட்டி வாங்கினதுண்டா?"
"பாவப்பட்டவன் வயித்தில் அடிச்சதுண்டா?"

இறந்தவர்களின் ஆன்மாவாக அலையும் பட்டாம்பூச்சிகள் பதில் அளிக்குமா என்ன?!
    கழுதை இலக்கிய இதழுக்கு ஒரு நடிகையான பின் அலிமா அளிக்கும் பேட்டி முக்கியமானது. தற்கால மலையாள நவீன எழுத்தாளர்கள் எல்லோரும் வந்து போகின்றனர். அலிமா ஒரு தீவிர படைப்பாளி என்பதுடன் ஒரு பின்நவீனத்துவவாதி என்பதைக் காட்டுகிறது இப்பேட்டி.
    அகரன் ஒரு சினிமா இயக்குநர் என்றாலும் அலிமாவின் ஆளுமைக்கு அவர் அளிக்கும் மதிப்பு மரியாதையினால் அலிமாவின் மதிப்பு வாசகனின் மனதில் பலபடி ஏறி நிற்கிறது. ஆனால் லாட்ஜ் பையனுக்கு அவள் அளிக்கும் தரிசனம் பிறழ்மனமா, கருணையா, பேரன்பா என வகைப்படுத்தி அறிய முடியவில்லை.
    தன்னுடன் மனநலக் காப்பகத்தில் இருந்த அக்கம்மாவுக்கு எழுதும் கடிதம் அவர்கள் இடையேயான உறவு மேன்மை கொண்டதான சாயல் தருகிறது.
    சுவர்களில் கரியால் ஓவியம் வரையும் கரிக்கோடன் மரணம் பற்றி அவள் எழுதும் கட்டுரை வெளியாவதில்லை. அலிமாவின் மனவுலகம் எதுவும் அவ்வளவு எளிதில் புலனாவதில்லை என்பதைப் போலத் தான் அதுவும் எனக் கருதலாம்.
    கலாச்சாரக் காவலர்களான அடிப்படைவாதிகளால் அவள் நடிகையான(!?) பிறகு எழுதப்படும் கொலை மிரட்டல் கடிதம் பல பேரை நமக்கு நினைவூட்டுகின்றன.
    பணிக்கரின் கடையில் சாப்பிட்டதற்கு பணம் தராமல் வெளியேறும் அலிமாவைத் துரத்தும் சர்வர் ஜெயச்சந்திரனுக்கு அவன் ஆழ்மனதில் விரும்பும் உள்ளாடையை வாங்கித் தந்து 'உள்ளிருக்கிறது யாருக்கும் தெரியாது' என்கிறாள். பின்னாளில் கடையின் முதலாளி ஆகும் அவன், அவள் மீண்டும் சாப்பிட வரும்போது 'காசு கொடுக்காம போங்க' என்கிறான். ஆனால் பணம் தருகிறாள். கடையனுக்கு கடைத்தேற்றம் தந்தவளாக வாசக மனதில் உயரும் அலிமா ஞானம் அடைந்தவளா? தெரியாது.
    இந்நாவலை வாசிக்கையில் பல வருடம் முன் வாசித்த சாரு நிவேதிதாவின் ஜீரோ டிகிரி நினைவில் வந்தது. ஆனால் அதன் போலச் செய்தல் அல்ல அலிமா. இது ஒரு பின்நவீனத்துவ பிரதி என்பதில் ஐயமில்லை. அதேபோல நாவலில் அவள் எழுதியதாக்க் கூறும் என்ட யாத்ரா எனும் கதை கமலாதாஸையும் நினைவூட்டுகிறது.
    நான் பதினைந்து ஆண்டு காலம் வாழ்ந்த கோவை புலியகுளம் பகுதியின் ஒரு வெளிக்கோட்டுச் சித்திரமும் நாவலில் வந்து போனது காலாற நான் நடந்து பழக்கப்பட்ட பகுதியை மீண்டும் ஒரு முறை வலம் வந்த மகிழ்ச்சியைத் தந்தது.
    அலிமாவின் கதை, அவள் பேட்டி, எழுதிய கட்டுரை, அவளது இரு சிறுகதைகள், கடிதங்கள், அவளது காமம், நடிகையான கதை, நாடோடி வாழ்வு, அவள் தந்தையின் வணிகத்தில் பணியாற்றும் தமிழ்நாட்டு இஸ்லாமிய இளைஞர்கள், அவள் ஒரு காற்றுப் போல எதிலும் அடைக்கப்பட முடியாதவள் என்பது அறியாமல் அவளை விரும்புவர்கள், அவளை அடைந்து அடையத் துடிப்பவர்கள் எனச் செல்லும் இந்நாவல் மையமற்ற மையமாக தொடர்ச்சியற்ற தொடராக ஒழுங்கின்மையின் ஒழுங்கமைவாக அமைந்துள்ளது.
    கடைசியில் அவளுக்கு கடிதம் எழுதுவது யார் என்று தெரியாது. ஆனால் அது கபூராக இருக்கலாம். அல்லது ஷேக்காக இருக்கலாம். அவள் மீது பேரன்பு கொண்ட வேறு யாரேனுமாகவும் இருக்கலாம்.
    'சுயமான முழுமையான மனிதன் என்று யாருமே இல்லை. அதற்கான சாத்தியமும் இல்லை' என ஃபூக்கோ சொல்வதும் 'எனது சுயம் எனக்குள் இல்லை. எனக்கு வெளியே இருக்கிறது' என லக்கான் சொல்வதும் பன்முகத்தன்மை கொண்ட குறுங்கதையாடல்களால் உருவாகியுள்ள #வடக்கேமுறி_அலிமா எனும் இப்பிரதிக்கும் அப்படியே பொருந்துகிறது. அதுவே இதை பின்நவீனத்துவ பிரதியாக்குகிறது. ஜாகிர்ராஜா அவர்களின் கருத்த லெப்பை, மீன்கார தெரு இன்னும் படிக்கவில்லை என்றாலும் அலிமா எனும் அற்புதப் படைப்பு தந்த வாசிப்பனுபவம் கிடைக்குமா எனத் தெரியவில்லை.
    அலிமா என்பவள் பெண்ணியவாதியா? புரட்சிக்காரியா? எதிர் கலாச்சாரத்தில் வாழ்பவளா? விளிம்புநிலை வாழ்வியா? மனப்பிறழ்வு கொண்டவளா? ஒழுக்கம் பிறழ்ந்தவளா? நாடோடியா? தீயொழுக்கம் உடையவளா? கஞ்சா பிரியையா? கழிவறை ஓவியரா? இலக்கியகர்த்தாவா? அறிவுலகவாதியா? ஞானியா? என பல கேள்விகள் எழுகின்றன. இவை எல்லாமும் தான். இவை எல்லாம் தாண்டியவளும் தான் என்பதே என் பதில்.

வடக்கேமுறி அலிமா
கீரனூர் ஜாகிர்ராஜா
பக்கம்: 144
மருதா பதிப்பகம்

Friday, December 21, 2012

அ.முத்துலிங்கம் எனும் அதிசயக்காரர்

சிறுவயது நினைவு ஒரு சங்கிலித் தொடர் போன்றது. ஒவ்வொருவருக்கும் தனது பால்ய கால மிச்ச நினைவுகள் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அது நிகழ்வுகளின் கோர்வையாக இல்லாவிட்டாலும் வாழ்வில் நிகழும் சம்பவங்களின் இருப்பு அவ்வப்போது எழுந்து நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது. ஆனால் அந்த நினைவுத் தொடர் அறுபட்டுவிடாமல் அதை கோத்துக் கொண்டே செல்வது எல்லோராலும் முடிவதில்லை.

பால்ய கால நினைவுகள் ஒரு பழைய கறுப்பு வெள்ளை புகைப்படம் போல எல்லோரது மனதிலும் தொங்கியபடி இருக்கிறது. காலங்கள் மாறினாலும் அனுபவங்கள் ஏறினாலும் சூழ்ந்தழுத்தும் வாழ்க்கையிலிருந்து தப்பிச் செல்ல சிறுவயது நினைவுகள் எல்லோருக்கும் துணையாய் இருக்கின்றன. அந்த வாழ்க்கைக்குள், அந்தக் காலத்துக்குள் பின்னோக்கிச் சென்று முகிழ்த்துவிட மாட்டோமா என்ற ஏக்கம் ஒவ்வொருவருக்குள்ளும் ஊழித் தீயைப் போல எரிந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் உறைந்துவிட்ட கடந்த காலம் அந்தப் புகைப்படம் போல மீட்டு வர முடியாததாகவும், ஒரு வழிப்பாதையாகவுமே இருக்கிறது. நினைவுகளால் மட்டுமே அதை தொட்டுப் பார்க்க முடிகிறது. அதற்கு மனதை விட வேறெந்தக் கருவியும் உவப்பானதாக இருப்பதில்லை.

ஏற்கெனவே நிகழ்ந்து விட்ட காலத்தை மனதில் மீண்டும் ஓட்டிப் பார்த்து அதை எழுத்தாக மாற்றிவிடும் வல்லமை ஒரு சிலருக்கே வாய்க்கிறது. அதிலும் வாழ்வை சுவாரசியமாகப் புனையும் திறமை குவிந்து கிடப்பது அ.முத்துலிங்கம் எழுத்துகளில்தான். எழுத்தாளர்கள் விரும்பும் எழுத்தாளராக விளங்கும் அ.முத்துலிங்கத்தின் “உண்மை கலந்த நாட்குறிப்புகள்” என்ற நாவல், சிறுகதைகளின் தொகுப்பா அல்லது புலம் பெயர்ந்த தமிழரின் நினைவு மீட்புக் குறிப்புகளா அல்லது கட்டுரைக்கும் புனைவுக்கும் இடையில் நிகழும் ஊடாட்டமா என்பது வாசிப்பவரின் அனுபவத்தைப் பொருத்து மாறுபடுகிறது.
படிக்கச் சுவாரசியம் என்ற பெயரில் துணுக்குகளையும் தேதிகளையும் சேர்த்து உருவாக்கப்பட்ட வாழ்க்கை வரலாறுகள் வெறும் ‘எழுதப்பட்ட’வையாகவே உள்ளன. ஆனால் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உண்மையில் ‘படைக்கப்பட்ட’ ஒரு வாழ்க்கை வரலாறாகவே உள்ளது.


46 தலைப்புகளில் புனையப்பட்ட இந்த உண்மை கலந்த நாட்குறிப்புகள் என்ற நாவல், ஈழத்தில் துவங்கி பாகிஸ்தான், ஆப்பிரிக்கா, ஐரோப்பா, கனடா என்று உலகம் சுற்றிச் சுழல்கிறது. இதில் வரும் மனிதர்கள் எல்லோரும் சுவாரசியமானவர்கள் என்பது மட்டுமல்ல தமிழ் படைப்புலகம் இதுவரை கண்டிராதவர்களாக உள்ளனர்.

உலகின் ஆதி மொழிகளில் ஒன்றான யேசு பேசிய மொழியான அராமிக் மொழி பேசும் சிகையலங்கார நிபுணர் தனியே தன் வீட்டுச் சுவற்றில் பேசி தாய்மொழி மறந்துவிடாமல் காப்பாற்றுகிறார். தனி நாடு இல்லையெனில் மொழியின் அழிவு நிச்சயம் என்று சொல்லும் அவர் அதற்கான காரணத்தை தர்க்க ரீதியாக விளக்குகிறார்.

சில குறிப்புகள் சத்தமில்லாமல் சிரிப்பதற்கென்றே எழுதப்பட்டவையோ என்று கருத இடமுண்டு.

அவரது அக்காவுக்கு சங்கீதம் கற்றுக் கொடுக்க வரும் வாத்தியார் அவரது ஐயாவிடம் படும்பாட்டைக் கூறலாம். ‘அக்காவின் சங்கீத சிட்சை’ யில் யாரோ இவர் யாரோ என்ற பாட்டை மெழுகுவர்த்தி போல உருகி அக்கா பாடிக் கொண்டிருக்கையில் ஒருநாள் “அது நான் தான்” என்று வீதியில் ஒருவன் சத்தமிட்டுச் சென்றதுடன் அந்தக் கீர்த்தனை ஐயாவால் தடை செய்யப்படுகிறது. பிரச்னை அதோடு நின்றபாடில்லை. அதற்குப் பின் வந்த ஒவ்வொரு பாடலையும் ஐயா சலித்துப் பார்த்து அதில் ஆண் பெயர் வருகிறதா என்று சந்தேகக் கண்ணால் பார்த்த பின்னரே பாட அனுமதிக்கிறார். பிறகு ஒருநாள் அக்கா சங்கீதத்தின் கரையை கண்டுவிட்டபடியால் அவரது சங்கீத வகுப்பு முடிவுக்கு வந்தது என்று எழுதுகிறார்.

ஒவ்வொரு நாட்குறிப்பின் துவக்கத்திலும் எழும் சுவாரசியம் இறுதியில் ஒரு சுருக் வரியுடன் அல்லது வியப்பு கலந்து வரியுடன் முடிவடைகிறது.
காதலியை தன் வசமாக்கியதால் நீ ஒரு முழுத் துரோகி என்று கத்திவிட்டுச் சென்ற பால்ய கால நண்பன் ஐம்பது ஆண்டுகள் கழித்து மீண்டும் கனடாவில் சந்திக்கிறான். அப்போது அவன் கோபப்பட்டு முத்துலிங்கத்தின் சட்டையைப் பிடிப்பதில்லை. அவசரமாக வெளிநடப்புச் செய்வதில்லை. மாறாக புன்னகைத்துச் செல்கிறார். காலம் அதன் திசையில் வரும் அனைத்தையும் மாற்றிவிடுகிறது. ‘துரோகியின் காதல்’ இல் வரும் மதியாபரணத்தைப் போல.

சியாராலியோனில் வேலை கிடைத்து அங்கு சென்று அலுவலகம் செல்ல படகில் பயணித்தபோது, இறக்கும் நிலையில் உள்ள தன் தாயுடன் வரும் ஆப்பிரிக்கன் ஒருவன், சூனியக்காரனிருந்தால் தன் தாயைக் காக்க முடியும் என்று கூறி அவளை ஆசிரியரிடம் விட்டுச் செல்கிறான். அவன் சென்ற சிறிது நேரத்தில் அவர் கைகளிலிருந்த முதியவளின் உயிர் பிரிகிறது. மாபெரும் துயரம் அவரைச் சூழ்ந்துவிட்ட நேரம் அது. ஆனால் அதை வாழ்க்கையிலிருந்து எடுத்து எழுத்தில் புனைவாக்கும்போது துயரத்தை எளிதாகக் கடந்து செல்கிறார். முழு டிக்கெட்டுக்கான பயண தூரத்தை அடையும் முன்பே பாதியில் டிக்கெட் எடுத்துவிட்ட அந்தக் கிழவியைப் பற்றி படகில் யாருமே அறிந்திருக்கவில்லை என்று அபத்த நகைச்சுவையாக அதைப் படைக்கிறார் சூனியக்காரன் என்ற கதையில்.

நல்ல வாசகர்கள் உள்ளவரை நல்ல புத்தகங்கள் வரும். நல்ல புத்தகங்கள் வரும்போது நல்ல வாசகர்களும் வருவார்கள். இதில் எது முதலில் என்பதுதான் தெரியவில்லை என்கிறார். சிறுவயதில் அம்புலி மாமா படிக்கத் தொடங்கி கல்கிக்கு வந்து புதுமைப்பித்தனில் வியந்து ஜேம்ஸ் ஜாய்ஸின் Dubliners இல் மூழ்கி தாமும் இவர்களைப் போல எழுத வேண்டும் என்று ஆவல் கொள்கிறார். வாழ்வின் அனுபவம் புத்தகங்களைத் தேடிச் செல்ல வைக்கிறது.

 புத்தகத்தில் பற்று வைக்கும் ஒருவருக்கு வேறு பற்று இருக்காது. ஆயிரம் புத்தகம் படித்தால் ஆயிரத்தோராவது புத்தகத்தில் வியப்பதற்கு விஷயம் குறைந்து கொண்டே வரும். ஆனால் தனக்கோ ஆர்வம் கூடிக் கொண்டே வருகிறது என்று அதிசயிக்கிறார். ஆனால் வாழ்நாள் குறைந்து வருகிறதே என்று வருந்துகிறார்.

நல்ல வாசகரா, நல்ல புத்தகமா எது முதலி்ல் என்பதற்கு யாரிடமும் பதிலில்லை. ஆனால் எது முதலில் நடந்தாலும் அது அதிசயம்தான். உண்மை கலந்த நாட்குறிப்புகள் அதிசயங்கள் கலந்தது.